தாழ்த்தப்பட்டவர்களின் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை: போலீஸ் குறை கேட்பு கூட்டத்தில் புகார்

தங்கவயல்: தங்கவயல் அருகே தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களின் அருகே தாழ்த்தப்பட்டவர்களின் நாய்கள் கூட வரக்கூடாது என்று உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக, எஸ்.சி, எஸ்.டி.மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் சமதா சைனிக் தள அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். தங்கவயல் மாவட்ட போலீஸ் சார்பில் எஸ்.பி.இலக்கியா கருணாகரன் தலைமையில் எஸ்.பி.அலுவலகத்தில் எஸ்.சி, எஸ்.டி.மக்களின் குறை கேட்பு கூட்டம் நடந்தது. இதில் சமதா சைனிக் தள தலைவர் ஜெரி ஜெயகுமார் பேசும் போது, தங்கவயல் தாலுகாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

பேத்தமங்கலம் அடுத்த தொட்டகாரி என்ற கிராமத்தில் உள்ள காலணி மக்களை அங்குள்ள கங்கம்மா ஆலயத்தில் நுழைய விடுவதில்லை. அது மட்டுமின்றி தலித் மக்களின் காலனியை சேர்ந்த தெரு நாய்கள் கூட தங்கள் குடியிருப்பில் வரக்கூடாது என்று அந்த நாய்களுக்கு விஷம் வைத்து பல நாய்களை கொன்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்றார். மேலும் இந்த கூட்டத்தில் தலித் ரக்‌ஷண வேதிகே, அன்பரசன், தலித் அமைப்புகளை சேர்ந்த சூலிகுண்டே ஆனந்த், பங்காருபேட்டை ராஜப்பா உள்பட பலர் பேசினர்.

Related Stories: