திருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராணி என்கிற ஜெயலட்சுமி (35), கடந்த 25ம் தேதி சக்திவேலும், ஜெயலட்சுமியும் அதே கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றனர். அங்கு, அதே வல்லிபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர் ராணியை தனது பைக்கில் உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு ராணி உட்கார மறுத்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராணியின் கணவர் சக்திவேல், ஏன் என் மனைவியை பைக்கில் உட்கார சொல்கிறாய் என்று கேட்டதற்கு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மோகனின் தம்பி அருள், அவரது தாயார் புவனேஸ்வரி, மோகனின் மனைவி சுலோச்சனா ஆகிய மூவரும் சக்திவேல் வீட்டிற்கு சென்று அசிங்கமாக பேசி, சக்திவேல் குடும்பத்தாரைப்பார்த்து  ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள் என்று கூறி உங்களை குடும்பத்தோடு காலி செய்து விடுவேன் என்று கூறி மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு அங்குள்ள செங்கல் சூளை அருகில் எரிந்த நிலையில் ராணி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து விட்டு வந்து தகவல் கூறினர். அனைவரும் ஓடிப்போய் பார்த்துள்ளனர். இது குறித்த தகவலின்பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள மோகன் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: