×

உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், சிந்து தோல்வி

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெறும் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் முதல் லீக் சுற்றில் இந்திய  வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். பாங்காக்கில் நேற்று தொடங்கி ஜன.31ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில், தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தியாவில் இருந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் லீக் சுற்றின் பி-பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் (25 வயது, 7வது ரேங்க்), 2வது நிலை வீரர் டென்மார்க்கை சேர்ந்த ஆன்டோன்சென் (23) மோதினர்.

சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்டிலும் அதிரடியாக விளையாடிய ஆன்டோன்சென் 21-16, 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி 2-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், பி-பிரிவின் முதல் லீக் ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீராங்கனை தைவானைச் சேர்ந்த டாய் சூ யிங் (26), உலகின் 7ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சிந்து (25) களமிறங்கினர். ஸ்ரீகாந்தை போலவே சிந்துவும் முதல் செட்டை கடுமையாகப் போராடி 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களை டாய் சூ 21-12, 21-17 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தி 2-1 என்ற செட்களில் வென்றார். இன்று நடைபெறும் 2வது லீக் சுற்றில் சிந்து, உலகின் 5ம் நிலை வீராங்கனையான ரட்சனோக் இன்டனான் உடன் மோதுகிறார். ஸ்ரீகாந்த், உலக பயண பிரிவு 5ம் நிலை வீரரான, தைவானின் வாங் சூ வெய்யை எதிர்கொள்கிறார்.

Tags : World Tour Finals Badminton Srikanth ,Sindhu , World Tour Finals Badminton Srikanth, Sindhu lose
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்