×

அக்காள் மகளுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் காதலனை கொன்று டீசல் ஊற்றி எரித்த கொடூர காதலி கைது: உடந்தையாக இருந்த அக்காள், அண்ணன் உள்பட மூவர் சிக்கினர்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலை ஓர புதரில் கடந்த வாரம் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. ஜெயமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம், விருவீடு ஆனந்தராஜ் (29) என தெரிந்தது. ஆனந்தராஜூம் இவரது உறவினர் பெண்ணான வடுகபட்டியை சேர்ந்த விஜயசாந்தி (19) என்பவரும் காதலித்து வந்தனர். விஜயசாந்தி பெரியகுளம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஆனந்தராஜூக்கு அவரது அக்காள் மகளை திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடந்தது. காதலன் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த விஜயசாந்தி, ஆனந்தராஜை கொல்ல திட்டமிட்டார். அவரது அக்காள் வித்யா (30)  கொடுத்த ஆலோசனையின்படி, சம்பவத்தன்று ஆனந்தராஜை மேல்மங்கலம் வைகைபுதூர் சாலைக்கு வரச் சொல்லியுள்ளார். அங்கு விஜயசாந்தி, அவரது பெரியப்பா மகன் பிரபாகரன் (30) சேர்ந்து ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் சாலை ஓர புதரில் போட்டு டீசல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை விசாரணையில், விஜயசாந்தி மதுரையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று மதுரை சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த விஜயசாந்தி, பிரபாகரன், வித்யா, இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஆசைபாண்டி (30) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Akkall , Akkall's girlfriend arrested for killing boyfriend and burning her with diesel
× RELATED ஒரே மேடையில் சந்தோஷம், துக்கமும்,...