×

அதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் : டிடிவி தினகரன் பேட்டி

பெங்களூரு : அதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையானார். சசிகலாவிடம் விடுதலை தொடர்பான ஆவணங்களை மருத்துவமனையில் சிறைத்துறை ஒப்படைத்தது. சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் டிடிவி தினகரன், வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடன் இருக்கின்றனர். சசிகலா விடுதலையையொட்டி அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில், பெங்களுருவில் அம்மா மக்கள் முன்னேற்றக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலையாகிவிட்டார். தமிழக மக்கள் சின்னம்மாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவை சென்னை அழைத்து வருவது குறித்து மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும். மருத்துவர்களின் அறிவுரைப்படி சின்னம்மாவை தமிழகம் அழைத்து வருவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், “சசிகலா விடுதலையன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா நினைவிடம் திறந்ததை பார்க்கும் போது, சசிகலா விடுதலையை கொண்டாடுவது போல் தான் உள்ளது.என்றார். அத்துடன் அதிமுக – அமமுக இணையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டிடிவி தினகரன், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை எனக் கூறினார். 


Tags : AIADMK ,Jayalalithaa ,DTV Dinakaran ,interview ,Tamil Nadu , டிடிவி தினகரன்
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...