டெல்லி : டெல்லியில் குடியரசு தினத்தில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணி வெற்றி பெற்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை டெல்லி முற்றுகை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளை போலீசார் கலைத்தனர். போராட்டத்தின் உச்சமாக செங்கோட்டையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் தங்களின் சீக்கிய கொடிகளை நட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.