துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி:  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுவை கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி அண்ணா சிலை அருகில் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அரசுக்கு எவ்வாறெல்லாம் கவர்னர் தொல்லை கொடுத்தார். என்பதை மக்களிடம் சொல்லி கையெழுத்து பெற வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களை தடுத்து நிறுத்த கிரண்பேடி யார்?. இன்றைக்கு புதுச்சேரி எப்படி இருக்கிறது பாருங்கள். ஜம்மு- காஷ்மீர் போல மாறிவிட்டது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக நடப்பதால் பயந்து கொண்டு வெளியே வரவில்லை.  கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அரசியல் சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். காங்கிரசை விட்டு யார் போனாலும் கட்சியை அசைத்து கூட பார்க்க முடியாது. இந்த பதவி எனக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் காங்கிரஸ்காரன்தான். கடைசி வரை காங்கிரசில் தான் இருப்பேன். பதவி, பணம், சொந்த பந்தத்துக்கு செய்யமுடியவில்லை என்று கூறிவிட்டு சிலர் ஓடிப்போகிறார்கள். அவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கட்சியை விட்டு செல்பவர்கள், விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.  எதிரிகளை மன்னிப்போம். துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டோம், என்றார்.

Related Stories: