‘இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக அசிங்கமாக போய் கொண்டிருக்கிறது’

* திண்டுக்கல் சீனிவாசன் ‘திடுக்’ பேச்சு  

* அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்:  இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக, அசிங்கமாக போய் கொண்டு இருக்கிறது என்று பாருங்கள் என திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், நாகல்நகரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால், கேப்பையில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்கு புத்தி எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள். தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள். எங்கள் சட்டசபை தொகுதியில் முடிந்தவரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மணிக்கூண்டில் அதிமுக சார்பில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ‘‘முலாயம்சிங் பிரதமராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது’’ என்றார். ஏற்கனவே பிரதமர் நரசிம்மராவ், வாஜ்பாய் எனக்கூறி மிரள வைத்தார். ஆளுங்கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில், அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரதிநிதிகள் உளறிக் கொட்டுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

Related Stories: