சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாமகவும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதன்படி, வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழகத்தின் 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இட பங்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது. பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய உள் இடப்பங்கீட்டை வழங்க தயங்குகிறது. தமிழக அரசின் இந்த தயக்கம் எவ்வகையிலும் நியாயமற்றது.இவ்வளவுக்கு பிறகும் கூட நமக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம். யாருக்கோ அஞ்சி, நமக்கான இட பங்கீட்டை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.