மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு 98 பேரின் பெயரை பரிந்துரைத்த நிலையில் ஒருவருக்கு மட்டுமே பத்ம விருது அறிவிக்கப்பட்டது. இதனால் ஆளும் சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறும் பிரபலங்களின் பெயரை நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு  உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுக்கு தகுதியானர்கள் பட்டியல் விபரங்களை மத்திய அரசு மாநில அரசுகளிடம் கோரும். அதனை தொடர்ந்து விருது பெற தகுதியானர்களின் பட்டியிலை பரிசீலனை செய்து, இறுதி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும். கடந்த செப்டம்பர் மாதம் பத்ம விருதுக்கு தகுதியானர்கள் பட்டியலை தெரிவிக்குமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி, ஒவ்ெவாரு மாநிலத்திலும் பத்ம விருதுக்கு தகுதியான நபர்களின் பட்டியலை மாநில அரசுகள் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தன.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு தகுதியானவர்களாக மாநில அரசால் அடையாளங் காணப்பட்ட 98 பேரின் பட்டியலை அம்மாநில  மகாவிகாஸ் அகாடி (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) அரசு அனுப்பியது. ஆனால், நேற்று வெளியிடப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் மகாராஷ்டிராவில் ஒருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

மூத்த சமூக சேவகர் சிந்துதாய் சப்காலுக்கு மட்டுமே பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. பத்ம விருதுக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர், எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், சிவசேனா  மூத்த தலைவர் சஞ்சய் ராவத், யஷ்வந்த்ராவ் கடாக், டாக்டர்.ஜெகந்நாத் தீட்சித், மதுகர் பாவ் உள்ளிட்ட 98 பெயர்கள் மாநிலத்தால் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சிவசேனா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Related Stories: