கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்

மும்பை: டெல்லியின் எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 15,000 விவசாயிகள் மும்பையின் ஆசாத் மைதானத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு நடைபயணம் மேற்கொள்கின்றனர்.  மும்பை ஆசாத் மைதானம் முன்பாக விவசாயிகள் பேரணி நடைபெறுவதால், ஏராளமான போலீஸ் படைகள் மற்றும் சிஆர்பிஎஃப் போலீசார் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு பாதை மற்றும் ஆசாத் மைதானம்  முழுவதும்  ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

ஆளுநர் மாளிகைக்கு வெளியே கடுமையான  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவின் அச்சுறுத்தலைக்  கருத்தில் கொண்டு, ஆசாத் மைதானத்தில் மருத்துவர்கள் குழுவை மும்பை  மாநகராட்சி தயாராக வைத்துள்ளது.  முன்னதாக ஆசாத் மைதானத்துக்கு வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விவசாயிகளின் முன் ஆற்றிய உரையில், ‘இந்த போராட்டம் சாதாரணமானது அல்ல. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டில் உழைக்கும் மக்களைப்  பற்றி கவலைப்படுவதில்லை. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் அவர்கள் குறித்து எப்போதாவது பேசியிருக்கிறாரா? மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போதுள்ள ஆளுநரை போன்று இதுவரை எந்தவொரு ஆளுநரையும் நான் பார்த்ததில்லை. மகாராஷ்டிரா ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டோம்.  ஆனால், விவசாயிகள் தன்னை சந்திக்க வருகிறார்கள் என்பதை அறிந்த அவர், கோவாவுக்குச் சென்று விட்டார். அவருக்கு நடிகை கங்கனாவைச் சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை’ என்றார்.

விளம்பரத்திற்காக பேரணி:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் ராஜ்பவன் நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஆளுநரை சந்திக்க முடியாததால் ஆவேசம் அடைந்த அவர்கள் கோரிக்கை மனுவை கிழித்தெறிந்தனர்.  இதற்கிடையே மும்பையில் விளம்பரத்துக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது

Related Stories: