×

டெல்லியில் உயிர்ப்பலி ஏற்படுத்திய வன்முறை.. போலீசார் துப்பாக்கிச்சூட்டில் தான் விவசாயி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு!!

டெல்லி : டெல்லியில் செங்கோட்டை அருகே விவசாயிகள் நடத்தி வரும் பேரணியில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாக, விவசாயிகள் பேரணியை தொடங்கியதால் போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். அதுமட்டுமில்லாமல், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த விவசாயிகள், டெல்லியின் பல இடங்களில் டிராக்டர்களை தாறுமாறாக ஓட்டி போலீசாரை அச்சமடைய செய்து வருகின்றனர்.

இத்தகைய விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியே போர்க்களமாகி இருக்கும் இந்த சூழலில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு நவ்நீத் (45 வயது) விவசாயி உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் அந்த விவசாயி சரிந்து கிடக்கும் அந்த புகைப்படம் மனதை உலுக்குகிறது. உயிரிழந்த அந்த விவசாயி மீது தேசியக்கொடி போர்த்திய சக விவசாயிகள், அவருக்கு போராட்டக் களத்திலேயே அஞ்சலி செலுத்துகின்றனர்.

உயிரிழந்த விவசாயியின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்த விவசாயிகள், போலீசார் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் டிராக்டரை ஓட்டிச் சென்ற போது அவர் மீது புல்லட் ஒன்று பாய்ந்ததாகவும், அதில் அவர் காயமடைந்ததால் டிராக்டர் விபத்துக்குள்ளாகியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

Tags : Delhi , விவசாயிகள்
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...