72-வது குடியரசு தினம்..! சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: சிறப்பு விருதுகளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியேற்றினார். ஆளுநர் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. முப்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்கிறார். தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்துக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்பு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பொது மக்கள், பாா்வையாளா்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் விழாவைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. குடியரசு தின விழாவின்போது, மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீா் விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட உள்ளது.

முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், தென்னகப் பண்பாட்டு மையத்தின் சாா்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சாா்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெறவுள்ளன.

Related Stories: