சென்னை: அகில இந்தியக் குடிமைப்பணி நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள அகில இந்தியக் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6699 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நுழைவுத் தேர்வு கடந்த 24ம் தேதியன்று 16 மையங்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டன. இந்த நுழைவுத் தேர்வில் 3956 நபர்கள் கலந்து கொண்டனர்.
நுழைவுத் தேர்வுக்கான விடைகள் நாளை அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மைய இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் 31ம் தேதிக்குள் முதல்வர், அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் அவர்களது மின்னஞ்சல் முகவரி aicscc.gov@gmail.com தெரிவிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் அகில இந்தியக் குடிமைப் பணிக்கான தரத்திற்கு தயாரிக்கப்பட்டது. அகில இந்தியக் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்விற்கான பயிற்சி முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.