டெல்லியில் திட்டமிட்டபடி விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி: குடியரசு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் எந்த சுமுக தீர்வுகளும் ஏற்படாததால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணியை விவசாயிகள் இன்று நடத்த உள்ளனர். டெல்லி வெளிவட்ட சாலையில் சிங்கு, திக்ரி, காஜிபூர், பல்வால், ஷாஜகான்பூர் உள்ளிட்ட 5 எல்லைகளில் இருந்து பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர் 100 கி.மீ. தூரம் நடத்தப்படும் இந்த பேரணிக்காக போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ராணுவ அணிவகுப்பு,  மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், அங்கு 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவலால் இம்முறை குடியரசு தின அணிவகுப்பில் எந்த வெளிநாட்டு தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

டெல்லி ராஜ்கட் உள்ளிட்ட பகுதிகளில் முழு கவச பாதுகாப்பு உடை அணிந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளின் முக அடையாளங்கள் பதிவு செய்த கண்காணிப்பு கேமரா, 140 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக, ராஜபாதையில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அணிவகுப்பை பார்வையிடுவார்கள்.

அணி வகுப்பு நடக்கும் ராஜபாதையை சுற்றி 8 கி.மீ. தூரத்தில் உள்ள உயரமான கட்டிடங்களில் குறிபார்த்து சுடும் போலீசார், உளவுப் பிரிவினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறாக, அணிகளின் அணிவகுப்பு நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டை வரை செல்லும் அணிவகுப்பு தேசிய அரங்கம் வரை மட்டுமே செல்ல உள்ளது. மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு செங்கோட்டையில் மட்டுமே நடத்தப்பட இருக்கிறது. குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணியும் நடத்தப்படுவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பட்ஜெட் தினத்தில் பேரணி

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் போது, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்காக, குடியரசு தின விழா டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள டெல்லி வந்துள்ள விவசாயிகள் திரும்பி செல்லாமல், நாடாளுமன்ற பேரணியில் பங்கேற்பதற்காக இங்கேயே தங்கி விடுவார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், பல்வேறு விதமான பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Related Stories: