புதுடெல்லி: தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும், உடல்நலக்கோளாறு, பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியானபடி இருக்கின்றது.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ”கொரோனா தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களை பரப்பினால் பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உண்மை செய்திகள் உடனடியாக பொதுமக்களை சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.