ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்

வாஷிங்டன்: ஒரே நேரத்தில் 143 செயற்கைகோள்களை ஏவி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன்-9 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 143 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. புளோரிடா மாகாணம் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் மூலம் 143 சிறியரக செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இதில் அரசு தொடர்பான மற்றும் வணிகரீதியானவை என 133 செயற்கைக்கோள்களும், 10 ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களும் அடங்கும். நாசாவின் செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.  இதன் மூலம், இஸ்ரோவின் சாதனையை முறியடித்து ஸ்பேஸ் எக்ஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ நிறுவனம் 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: