சென்னை: நாடு முழுவதும் நேற்று தேசிய வாக்காளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரவேற்றார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய வாக்காளர்களாக சுமார் 20 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. வழக்கமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த ஆண்டு, புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஸ்பீட் போஸ்ட் (விரைவு தபால்) மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.