சூடுபிடிக்கும் மேற்குவங்க தேர்தல் களம்: 2 நடிகைகள் திரிணாமுலில் சேர்ந்தனர்

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நடிகைகள் கவுஸ்சனி முகர்ணஜி, பியா தாஸ் ஆகியோர் இணைந்தனர். மேற்குவங்கத்தில் பேரவை தேர்தல் நடைெபறவுள்ளதால் அங்கு அரசியல் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தேர்தலின் தேதிகள் இதுவரை  அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பிரசாரம் வேகமெடுத்து வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களது கட்சியில் பிரபலங்களை இணைத்து தேர்தல் போர்க்களத்தை தயார் செய்து வருகின்றன. இதன் மூலம், திரிணாமுல், பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளில் பிரபலங்களின் இணைவும் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெங்காலி திரைப்பட நடிகைகள் கவுஸ்சனி முகர்ணஜி மற்றும் பியா தாஸ் ஆகியோர் இணைந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்வில் மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். அப்போது மம்தா பானர்ஜி தனது உரையை நிகழ்த்த மேடைக்கு வந்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் திடீரென ‘ஜெய் ராம்’ கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனால் அதிர்ச்சியடைந்த மம்தா, தான் பேசப் போவதில்லை என்று தனது இருக்கையில் அமர்ந்தார். மேலும், அரசு நிகழ்ச்சியில் இதுபோன்று யாரையும் அவமதிப்பது சரியல்ல என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் மம்தாவை பாஜக அவமதித்து விட்டதாகவும், பிரதமர் மோடி இவ்விஷயத்தில் மவுனம் ஏன் காக்க வேண்டும் என்றும், நடிகை கவுஸ்சனி கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: