×

அதிகார மோதலின் உச்சகட்டம் : ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்

காத்மாண்டு:அதிகாரம் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலால் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். பிரதமருக்கும் ஆளும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவர் புஷ்ப கமல் தஹார் பிரசந்தாவுக்கும் இடையே  அதிகார போட்டி நிலவி வருகிறது. இதனால், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர்  கே.பி.சர்மா ஒலி  கடந்த சில மாதங்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, வரும் ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடத்தவும் அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.

இதற்கிடையே ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி  கே.பி.சர்மா ஒலி தலைமை ஒரு பிரிவாகவும், புஷ்ப கமல் தஹார் தலைமை மற்றொரு பிரிவாகவும் கட்சி பிளவுபட்டது. நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர்  கே.பி.சர்மா ஒலி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புஷ்ப கமல் தஹாரின் தலைமையிலான பிரிவு நேபாளம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டார்.

இந்நிலையில், புஷ்ப கமல் தஹார் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், கே.பி.சர்மா ஒலியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக புஷ்ப கமல் தஹார் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயன் கஞ்ச் ஸ்தா தெரிவித்தார்.  கே.பி.சர்மா ஒலி - புஷ்ப கமல் தஹார் ஆகிய இரு தலைவர்களும், பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வதாக முன்பு ஒப்புக்கொண்டனர். ஆனால் தற்போது புஷ்ப கமல் தஹாருக்கு பொறுப்பை வழங்க ஒலி மறுத்துவிட்டார். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு தற்போது பிரதமரை கட்சியில் இருந்து நீக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Tags : KP Sharma ,Nepal ,party , நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது