தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை கருவான, முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் தேடப்படும் பவாரியா கொள்ளையனை 3 வாரத்திற்குள் கைது செய்ய உத்தரவு!!

சென்னை : தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை கருவான, முன்னாள் அதிமுக அமைச்சர் சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தேடப்படும் பவாரியா கொள்ளையன் ஜெயில்தர் சிங்கை 3 வாரத்திற்குள் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வீட்டுக்குள் நுழைந்த வட நாட்டு கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொலை செய்தனர். அவரது குடும்பத்தினரை தாக்கி படுகாயமடையச் செய்து, 63 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

ஹரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கும்பல், 2005 ம் ஆண்டு நடத்திய இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொலையாளிகளை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ் பரா 2005ம் ஆண்டிலிருந்து விசாரணை கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார் .

இந்த நிலையில் ஜெகதீஷ்  ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருப்பது குறித்து நீதிமன்றம்  கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன்,வழக்கில்  தலைமறைவாக உள்ள ஜெயில்தர்சிங்குக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதால், வழக்கு விசாரணை தடைபட்டுள்ளது.நீதிமன்றம்  3 வாரம் அவகாசம் வழங்கினால் அவரை கைது செய்வது தொடர்பாகவோ, மீதமுள்ளவர்களை வைத்து  வழக்கை முடித்து வைப்பது தொடர்பாகவோ காவல்துறையின்  நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்,  வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி ஜெயில்தர் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 3  வாரத்திற்குள்  ஜெயில்தர் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதோடு,ஜெகதீஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கு விசாரணையை பிப்ரவரி 15 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: