காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்திரன் (53). விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த ஜன.16ம் தேதி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார். ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் நின்றிருந்த இளைஞரிடம் பணம் எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் எடுத்துத் தருவதுபோல் ஏமாற்றிவிட்டு பணம் வரவில்லை என்று சொல்லி போலியான ஏடிஎம் கார்டை மாற்றி சந்திரனிடம் கொடுத்துள்ளார். இது தெரியாமல் சந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சந்திரன் வங்கிக் கணக்கில் இருந்து அந்த இளைஞர் ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் மறுநாள் பணம் எடுக்க வந்தபோது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதும், தன்னிடம் உள்ளது போலியான ஏடிஎம் கார்டு எனவும் தெரியவந்தது. எனவே, சந்திரன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.