பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்திரன் (53). விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த ஜன.16ம் தேதி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் உள்ள எஸ்பிஐ  ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார். ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் நின்றிருந்த இளைஞரிடம் பணம் எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் எடுத்துத் தருவதுபோல் ஏமாற்றிவிட்டு பணம் வரவில்லை என்று சொல்லி போலியான ஏடிஎம் கார்டை மாற்றி சந்திரனிடம் கொடுத்துள்ளார். இது தெரியாமல் சந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சந்திரன் வங்கிக் கணக்கில் இருந்து அந்த இளைஞர் ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் மறுநாள் பணம் எடுக்க வந்தபோது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதும், தன்னிடம் உள்ளது போலியான ஏடிஎம் கார்டு எனவும் தெரியவந்தது. எனவே, சந்திரன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, அரசு காத்தம்மன் கோயில் எதிரில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே சந்தேகத்திற்கு இடமாக. நின்றுகொண்டிருந்த நபரை  பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தக்கோலம், பழனியப்பன் கோயில் தெருவில் உள்ள தக்காளிசாமி மகன் ஏழுமலை (26) என்பது தெரியவந்தது. இவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் அதனடிப்படையில் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 11 ஏடிஎம் கார்டுகள் மற்றும் கையாடல் செய்த பணத்தில் செலவு செய்தது போக மீதமுள்ள ரூ. 36, 500 மற்றும் டூ வீலரையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஏழுமலையை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: