ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். பதவி மெயின் தேர்வு ரிசல்ட் மார்ச் 2ம் வாரம் வெளியீடு? மே, ஜூனில் நேர்முக தேர்வு என தகவல்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மே, ஜூனில் நேர்முக தேர்வு தொடங்க உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. 2020ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 4ம் தேதி நடந்தது.

இத்தேர்வை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 750 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத்தேர்வு நடைபெற்றது. 8ம் தேதி தொடங்கிய தேர்வு 9ம் தேதி, 10ம் தேதி மற்றும் 16ம் தேதி, 17ம் தேதி என மொத்தம் 5 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை மார்ச் மாதத்தில் வெளியிட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். நேர்முக தேர்வு 2 மாதம், அதாவது மே, ஜூன் மாதம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் அரசு பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒரு வருடம் அவர்கள் அந்த பணியில் பயிற்சியில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்களுக்கான முழுமையான பணிகள் ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: