இன்ஜினியரிங் மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை: அண்ணா பல்கலை., எச்சரிக்கை

சென்னை: பொறியியல் மாணவர்கள், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இரண்டு, மூன்றாமாண்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அந்த தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகளை தற்போது அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்;

இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 13ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடக்க உள்ளது. அதற்கான மாதிரி ஆன்லைன் தேர்வுகள் ஜனவரி 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கும். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்வரி மாதம் தொடங்கும். இந்த தேர்வுகள் ஆன்லைன் முறையின் கீழ் நடத்தப்பட உள்ளன. தினமும் 5 பிரிவுகளாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 9மணி வரையும், காலை 10-11, மதியம் 12-1, 2-3, 4-5 மணி என தலா ஒரு மணி நேரத் தேர்வுகளாக செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பின்னர் அது 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்படும். மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கியதும், அவர்களின் கணினி இயங்கத் தொடங்கிய நேரத்தில் இருந்து மணி காண்பிக்கும். அப்போது ஒரு மணி நேரத்துக்கான கவுண்ட் டவுன் அதில் தெரியும். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழிலும் கேள்வித்தாள் அமைக்கப்படும். மாணவர்கள் எந்த வழியில் தேர்வு எழுத விரும்புகிறார்களோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் தேர்வு எழுதும் போது, மாணவர்கள் அவர்களுடன் வேறு யாரையும் அமர வைத்துக் கொள்ளக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் அடையாள அட்டைகளை அணிவதுடன், அரசின் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் அடையாள அட்டைகளை அணிவதுடன், அரசின் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Related Stories: