மே 5க்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல்? தலைமை தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அடுத்த சில நாட்களில் ஆய்வு செய்ய வர இருந்த சூழலில், தலைமை தேர்தல் அதிகாரிகள், மாநிலத்தில் பள்ளி தேர்வுகளுக்கு முன்னதாக அதாவது மே மாதம் 5ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கலாமா என திடீர் ஆலோசனை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். முன்னதாக,  தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாநிலத்துக்கு வந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் மாநில தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அலுவலர்களான ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், வருமான வரித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மேற்கண்ட அதிகாரிகள் புதுவை மாநிலத்திலும் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து தமிழகம் உட்பட விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்துவது, பாதுகாப்பு நடவடிக்கை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கடந்த 12ம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவிடம் தீவிர ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். மேலும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் விரைவில் தமிழகம் வரவுள்ளனர். குறிப்பாக அடுத்த வாரத்தில் அவர்கள் வருவார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தற்போது திடீர் ஆலோசனை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தில் வரும் மே மாதம் 5ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வு தொடங்க உள்ளது. அதற்குள் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடித்து விடலாம் என ஆலோசித்துள்ளதாக தெரிகிறது. அதேப்போல் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அடிப்படையாக ெகாண்டு, தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் எதிர்வரும் தேர்தல்களில் மின்னணு வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தவும் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் உட்பட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி திரும்பியவுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த இறுதி தேதியானது அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் இறுதி செய்து அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

* முதல் முறையாக வாக்காளர் மின்னணு அட்டையை பயன்படுத்துவது ஆலோசிக்கப்பட்டுள்ளது

* பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்குவதால் தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: