கூடலூர்: கேரளாவின் இடுக்கி மற்றும் பத்தனம் திட்டா மாவட்டங்களில் 925 கிமீ பரப்பளவில் உள்ளது பெரியாறு புலிகள் சரணாலயம். கடந்தாண்டு நவம்பர் மாதம் பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள மங்கலதேவி வனப்பகுதியில் தேக்கடி வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்பகுதியில் தாய் புலியால் கைவிடப்பட்ட சுமார் 60 நாள் வயதுடைய பெண் புலிக்குட்டியை வனத்துறையினர் பார்த்தனர். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அந்த புலிக்குட்டியை மீட்டு, தேக்கடி வனவிலங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனையடுத்து தாய் புலியை கண்டுபிடிப்பதற்காக பெரியார் சரணாலயம் மற்றும் அதை ஒட்டி தமிழக எல்லையில் உள்ள மேகமலை வனவிலங்கு சரணாலய பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன, ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.