நாகர்கோவில் சாலைகளில் வேகத்தடைகளில் வெண்பட்டை கோடுகள் வரைய வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் நகரில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெண்பட்டை கோடுகள், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் மாநகரில் பல்வேறு சாலைகள் மோசமாக கிடக்கும் நிலையில் ஒரு சில சாலைகள் மட்டும் தற்போது ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சரி செய்யப்பட்ட சாலைகளில் விபத்துக்களை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள்  விதிமுறை மீறி அமைக்கப்பட்டு உள்ளதால், விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்லவும், விபத்துகளின்றி பயணம் செய்யவும் தான் வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் சீராக அமைக்கப்படுவதோடு, தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் விதிமுறை ஆகும்.  ஆனால்  நாகர்கோவிலில் நகர இணைப்பு, குடியிருப்பு சாலைகளில் வேகத்தடைகள் விதிகளை மீறி அமைக்கப்பட்டு இருப்பதுடன், வேகத்தடைகளை குறிக்கும் வகையில் வெண் பட்டை கோடுகள் வரையப்பட வில்லை. இந்த வெண்பட்டை கோடுகள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும். இதனால் வேகத்தடைகளுக்கு முன்பே வேகத்தை குறைத்து வாகனங்களை இயக்க வழிவகை ஏற்படும். நாகர்கோவில் நகரை பொறுத்தவரை பல சாலைகளில் இரவு நேரங்களில் போதிய மின் விளக்கு வசதிகள் கிடையாது.

இதனால் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் வாகனங்கள் வேகமாக வருகின்றன. குறிப்பாக பைக்கில் வருபவர்கள் இந்த வேகத்தடையில் ஏறி கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. சமீபத்தில், பெண்கள் கிறிஸ்தவ சாலையில் உள்ள வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்த வாலிபர், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் வகையில் வேகத்தடைகளில் வெண்பட்டை கோடுகள் வரையப்பட வேண்டும். மேலும் வேகத்தடைகள் உயரத்தை குறைத்து அடுக்கு வேகத்தடைகள் அமைக்கப்படும் போது விபத்துக்களை குறைக்கலாம் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories: