இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்; கல்லூரி மாணவிக்கு ஒரு நாள் முதல்வர் பதவி: வாய்ப்பு கொடுத்தது உத்தரகண்ட் அரசு

ஹரித்துவார்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஹரித்வாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி ஒரு நாள் முதல்வராக பதவி வகித்தார். சாதனை புரியும் சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு நாள் கலெக்டர், எஸ்பி போன்ற பதவிகளில் உட்காரவைக்கப்பட்டு கவுரவிப்பது வழக்கம். இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் தவுலத்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி (19) என்பவர் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக இன்று பதவி வகித்தார்.  இவரது தந்தை ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார்.

அவரது தாயார் அங்கன்வாடி தொழிலாளி. கடந்த 2019ம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க சிருஷ்டி கோஸ்வாமி  தாய்லாந்து சென்று வந்தார். ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு பெற்ற சிருஷ்டி கோஸ்வாமி, கோடைகால தலைநகரான கெய்செயினில் அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் மற்றும் பிற மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களை மறுஆய்வு செய்தார். சிருஷ்டி முதல்வராக செயல்பட்ட போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருந்தார்.

ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டி, உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: