ஊட்டி: மின் உற்பத்திக்காக தொடர்ந்து தண்ணீர் எடுத்து வரும் நிலையில், பைக்காரா அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவாணி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, கிளன்மார்கன், மரவக்கண்டி போன்ற அணைகளின் மூலம் நீர் மின் நிலையங்களில் இருந்து நாள்தோறும் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. கோடை காலங்களில் மின் தேவை அதிகரிக்கும்போது, அனைத்து நீர் மின் நிலையங்களும் இயக்கப்பட்டு மின் தட்டுப்பாடு சீரமைக்கப்படுகிறது. இதனால், கோடை காலங்களில் மின் உற்பத்திக்காக பயன்படும் அணைகள் அனைத்திலும் தண்ணீரின் அளவு மிகவும் குறையும். இம்முறை பைக்காரா மின் நிலையம் மற்றும் சிங்காரா மின் நிலையங்களில் நாள்தோறும் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போது பைக்காரா அணையில் இருந்து தினமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.