×

இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ வழித்தடங்களுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது

சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடங்களுக்கு ஏற்றவாறு புதிய பெயர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூட்டியுள்ளது. சென்னையில் நாள்தோறும் 45 ஆயிரம் பேர் வரையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். முதல் வழித்தட திட்ட நீட்டிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், 118.9 கி.மீ தூரம் கொண்ட மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி உள்ளது. ஏற்கனவே, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு நிலம் எடுக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், வழித்தடங்களுக்கு ஏற்றவகையில் புதிய வகையிலான பெயர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூட்டியுள்ளது.

அதன்படி, 3ம் வழித்தடமான மாதவரம் முதல் சிப்காட் வரையிலான வழித்தடத்திற்கு தகவல் தொழில்நுட்ப வழித்தடம் எனவும், 4ம் வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான வழித்தடத்திற்கு வணிகப்பகுதி வழித்தடம் எனவும், 5ம் வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்திற்கு சுற்றுவட்ட வழித்தடம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில், மாதவரம் முதல் சிப்காட் வரையிலான வழித்தடத்தில்தான் அதிக அளவிலான மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வழித்தடத்தில் 50 நிலையங்களும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 48 நிலையங்களும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 30 நிலையங்களும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : routes ,phase , In the second phase project Metro routes have been renamed
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்