ஆத்தூர்: தலைவாசல் அருகே, வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியையுடன் ஆசிரியர் தனிமையில் இருந்த சம்பவம் அம்பலமானதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்திலுள்ள துவக்கப்பள்ளியில், தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக, அணைப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் பணியாற்றி வருகிறார். பகுதிநேர ஆசிரியர், தினமும் தலைமை ஆசிரியையை, தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். இதையடுத்து அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் நேற்று, பள்ளிக்கு வந்த இருவரும், பூட்டிய வகுப்பறைக்குள் தனிமையில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியையின் கணவர், பள்ளிக்கு வந்து வகுப்பறை கதவை தட்டி தகராறில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு பள்ளியில் குவிந்த பொதுமக்கள் இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன் வந்தார். அதன் பின்னரே, கதவை திறந்து இருவரும் வெளியே வந்தனர்.
பின்னர், நடந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளி வகுப்பறையில் ஒழுக்க கேடாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியரை பணியாற்ற அனுமதிக்க கூடாது என கூறினார். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.