×

இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் அடக்கம்: தங்கச்சிமடத்தில் மறியலால் பரபரப்பு

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் செந்தில்குமார் (32), நாகராஜ் (52), மெசியா (30), சாம் (28). இவர்கள் 4 பேரும் கடந்த 18ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்கி தீவைத்து எரித்து கொன்றனர். 4 பேரின் உடல்களும் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் உடல்களை ஒப்படைக்க  உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்த மத்திய வேளாண்மை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் கிரிராஜ்சிங்கிடமும் இக்கோரிக்கையை மீனவர்கள் வலியுறுத்தினர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து, மீனவர்களின் உடல்களை ஒப்படைக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. மீனவர்களின் உடலை பெற்றுவர நேற்று காலை கோட்டைப்பட்டினம் கடற்கரையில் இருந்து 2 விசைப்படகுகளில் தங்கச்சிமடம் மீனவர்கள் 10 பேர் குழுவினர் இந்திய கடல் எல்லை பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘அதுல்யா’ ரோந்து கப்பலும், இந்திய கடல் எல்லைக்கு சென்றது. காலை 11.30 மணியளவில் இலங்கையிலிருந்து கடற்படை கப்பலில் கொண்டு வரப்பட்ட 4 மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 4 மீனவர்களின் உடல்களும் மீட்புக்குழுவினர் சென்ற விசைப்படகில் ஏற்றப்பட்டு மதியம் 2 மணியளவில் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன. மீனவர்களின் உடல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 4 ஆம்புலன்சில் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மெசியாவின் உடல் மட்டும் நேற்று மாலை 5 மணிக்கு தங்கச்சிமடம் வந்தடைந்தது. ஆம்புலன்ஸ் எங்கேயும் நிற்காமல் நேராக அந்தோணியார்புரம் கல்லறை தோட்டத்திற்கு சென்றது. கோபமடைந்த மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மீனவர்கள் இருந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. உறவினர்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் கல்லறை தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மீனவர் மெசியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திமுக சார்பில் நிவாரண நிதி கனிமொழி எம்பி ஆறுதல்
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க ராமேஸ்வரம் வந்த கனிமொழி எம்பி தனுஷ்கோடியில் பாரம்பரிய மீனவர்களை சந்தித்து பேசினார். பின்னர் தங்கச்சிமடத்தில் இலங்கை கடற்படை தாக்குதலில் பலியான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்.

Tags : Bodies ,fishermen ,Sri Lankan Navy , Assassinated by the Sri Lankan Navy Burial of 4 Fishermen's Bodies:
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...