புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் தூண்டுதலால் திமுக தொண்டர் பெயர் நீக்கம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் தூண்டுதலால் திமுக தொண்டர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்  எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

கடந்த 1.1.2021 தேதியை தகுதி நாளாக கொண்டு திருத்தம் செய்து, இறுதி வாக்காளர் பட்டியலைகடந்த 20ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்களுக்கு பிரித்து உடனே வழங்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று ஆய்வு செய்து, படிவம் 6, 6ஏ, 7, 8, 8ஏ ஆகிய படிவங்கள் மூலம் சேர்த்தல் / நீக்கல் / திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளதா ? என்பதை சரிபார்த்து, குறைகள் ஏதேனும் இருந்தால், அதனை ஆதாரத்துடன் வரும் 25ம் தேதிக்குள் மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவிகிதம் சரியான வாக்காளர் பட்டியல் தான், திமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை கவனத்தில் கொண்டு திமுகவினர் அனைவரும் கவனமுடனும், முழு ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எறையூர் ஊராட்சி வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில், எறையூர் வாக்குச்சாவடி நிலை முகவர் புருஷோத்தமன் என்ற திமுக தொண்டரின் பெயர்அதிமுகவினரின்  தூண்டுதலால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை  கண்டுபிடித்துள்ளனர். இதுபோல் அதிமுகவினர்,  பல திமுகவினரின் பெயரை நீக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, திமுகவினர் அனைவரும் தங்கள் பெயர் உள்பட அனைத்து திமுகவினரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை மிகவும் கவனத்துடன் சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: