திருத்தணி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி நகரத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. திருத்தணி, ஆர்கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டம் மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மற்றும் பிரசவம், குழந்தைகள் நல பிரிவு இயங்கி வருகிறது. சிறிய விபத்துக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தினமும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். உள் நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருத்தணி உள்பட பல பகுதிகளில் பெரிய விபத்துக்கள் நடந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருத்தணி அரசு மருத்துவமனையில் போதிய வசதி கிடையாது. இதனால் திருவள்ளூர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர். திருத்தணியில் இருந்த மேற்கண்ட பகுதிகள் தொலைவில் உள்ளதால் செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் நடக்கிறது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், “பெரிய விபத்துக்களுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி கிடையாது. இதனால் உயிரிழப்புகள் நடைபெறுகிறது. எனவே, திருத்தணி அரசு மருத்துவமனையையொட்டி உள்ள 2.5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனையை விரிவுப்படுத்தி தரம் உயர்த்தி மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவேண்டும்” என்றனர்.

Related Stories: