திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி நகரத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. திருத்தணி, ஆர்கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டம் மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மற்றும் பிரசவம், குழந்தைகள் நல பிரிவு இயங்கி வருகிறது. சிறிய விபத்துக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தினமும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். உள் நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.