சங்க கால கோட்டையாக திகழும் பொற்பனையில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி

சென்னை: சங்க கால கோட்டை குறித்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் அகழாய்விற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாவியல் தொல்லியல் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் அகழாய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பரிந்துரையின் பேரில் இந்திய தொல்லியல் ஆய்வுக்கு விண்ணப்பம் அளித்திருந்தது. இந்நிலையில் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்ய மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

பொற்பனைக் கோட்டை 50 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இக்கோட்டையின் செங்கல் கட்டுமானம், 4 அடி அகலமுள்ள சுற்றுச்சுவர் மற்றும் ப வடிவ கட்டுமானத்தின் அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமல் உள்ளது. சங்க காலத்தை சேர்ந்த நடுகல் ஒன்றும் ஏற்கனவே இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செந்நாக்குழி என்றழைக்கப்பட்ட இரும்பு உருக்கு ஆலையும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்ககாலத்தில் இருந்த கோட்டைகள், அரண்மனைகள் அனைத்தும் அழிந்து போயின என்று கருதப்பட்டு வந்த நிலையில் அகழாய்வு நடத்த மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த அகழாய்வு தமிழக வரலாற்றாய்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Stories: