திருவனந்தபுரம்: சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா கணவரை விட்டு பிரிய தீர்மானித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. மாடல் அழகியான இவர் பிஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முத்த போராட்டத்தில் பங்கேற்றார். சபரிமலை செல்லும் பக்தர்கள் அணியும் உடையை ஆபாசமாக அணிந்து போஸ் கொடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுபோல கடந்த 2018ல் இருமுடி கட்டுடன் சபரிமலை சென்றார். பக்தர்கள் கடும் எதிர்ப்பால் திரும்பி செல்லும் நிலை எற்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகளை வைத்தே ஓவியம் வரைந்து இணையதளத்தில் வெளியிட்டார். இது குறித்த புகாரின்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பிஎஸ்என்எல் பணியில் இருந்து ரெஹானா பாத்திமா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ரெஹானா பாத்திமா, மனோஜ் தர் என்பவருடன் திருமணம் செய்யாமல் ‘லிவிங் டுகெதர்’ அடிப்படையில் வாழ்ந்து வருகிறார். 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பிரிய தீர்மானித்துள்ளனர். முறையாக திருமணம் செய்யாததால் தாங்கள் பிரிவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.