பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்தங்களில் புனித நீராடலுக்கு அனுமதி

ராமேஸ்வரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தீர்த்தமாடவும், தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தடை தொடர்கிறது. இதனால் வெளிமாநில பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது. ராமேஸ்வரத்தில் ஒட்டுமொத்த சுற்றுலா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தீர்த்தங்களில் புனிதநீராட அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கோயில் தேவஸ்தான அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘‘கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23.3.2020 முதல் ராமேஸ்வரம் கோயில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு புண்ணிய தீர்த்த கிணறுகளை பிப்ரவரி முதல் வாரத்தில் திறப்பதற்கான அலுவல் சார்ந்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: