இலங்கைக் கடற்படை கொன்றதாக கூறப்படும் 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு

டெல்லி: இலங்கைக் கடற்படை கொன்றதாக கூறப்படும் 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜேசுவின் விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்துப் படகில் பின்தொடர்ந்து சென்று மீனவர்களின் படகில் கடுமையாக மோதியதில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமாகினர். அதனை அடுத்து 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படை மீட்டது.

அதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களையும் நேற்று பிரேத பரிசோதனை செய்து இன்று ஒப்படைக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது இலங்கை கடலோர காவல் படை நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையிடம் உடல்களை ஒப்படைத்துள்ளது. ஒப்படைக்கப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் இன்னும் 2 மணி நேரத்தில் கோட்டைப்பட்டினம் வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. கோட்டைபட்டின துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் 4 மீனவர்களின் உடல்களும், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Related Stories: