வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி பூங்கா, முட்புதராக மாறிவிட்டது. இங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் மாயமாகிவிட்டன. இதனை சீரமைத்து குழந்தைகளும், முதியவர்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி 14வது வார்டு தனலட்சுமி நகரில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை ஆகியவை இயங்குகின்றன. இதன் அருகில், அப்பகுதி மக்களுக்காக பூங்கா ஒன்று இருந்தது. இந்த பூங்காவில், இப்பகுதியை சுற்றியுள்ள குழந்தைகள் விளையாடுவார்கள். இதற்காக ஊஞ்சல், சறுக்கு மெத்தை உள்பட பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
இந்தவேளையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக. இந்த, பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் நாளுக்கு நாள் காணாமல் போயின. தற்போது பூங்கா முழுவதும் முட்புதர்களாக காணப்படுகிறது. இதனால், சிறுவர்கள் விளையாட செல்லாமலும், முதியோர் நடைபயிற்சி செல்லாமலும் சிரமம் அடைந்துள்ளனர்.