சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட மூத்த தலைவரும், மார்க்சிய சிந்தனையாளருமான அரங்க.சின்னப்பா (82), பட்டுக்கோட்டை அருகேயுள்ள கறம்பியம் கிராமத்தில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அரங்க. சின்னப்பா இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இளம் வயதில் இணைந்து செயல்பட தொடங்கியவர். இறுதி மூச்சுவரை கொண்ட கொள்கையிலும், அமைப்பு நிலை செயல்பாட்டிலும் உறுதிகாட்டி செயல்பட்டவர்.
கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் கட்சிக் கல்வி இலாகா உறுப்பினர் என்ற பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர். அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளதுடன் இந்திய முறை வைத்தியத்தின் மீது ஆர்வம் கொண்டு கற்றவர். யோக பயிற்றுநராக தேர்வு பெற்றவர். அவரது மறைவு எளிதில் கடந்து செல்லக்கூடியதல்ல. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.