ஊரடங்கை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்காக சாமானியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

  இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் பசிப்பிணியைப் போக்கிடவும் வறியோரும், வாடி நலிந்தோரும், வழக்கமான தினக்கூலியினரும்,  ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக்  கடைப்பிடிக்க இயலாமல்,  பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.   ஆனால் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளால்   வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது.  வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க இந்த  வழக்குகள் பெரும் தடையாக உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்ற இந்தத் தருணத்தில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற  வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: