காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க விவகாரம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி  தனியார் நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்  தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய அருகில் வசிப்பவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், மாசுகட்டுப்பாட்டு  வாரியம் கருத்துக்கேட்பு கூட்டத்தை பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மீஞ்சூரில் நடத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த விரிவாக்கத்தால், துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள எங்கள் அரங்கண்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், இதனால் ஏற்படக்கூடிய கடல் அரிப்பால், கடலோர கிராமங்கள் காணாமல்  போகும். எனவே, கடந்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் 4  வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: