உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என் நேரு தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டங்களுக்கு தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு  நிலவுகிறது. அச்சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில்  தீர்மானம் நிறைவேற்றும் படி திமுக தலைவர் ஸ்டாலின்  அறிவுறுத்தி இருந்தார். அதன் காரணமாகவே  தமிழக அரசு, கிராமசபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார். அதே போல, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா  தாக்கல் செய்திருந்த மனுவில்,  கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த முக்கிய காரணமும்  இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த  வழக்குகள் நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் எஸ்.ஆர் ராஜகோபால் இந்த வழக்கு  தொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார். அப்போது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியமன், ஏற்கனவே அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  தற்போது ஜனவரி  26ம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்பதால், வரும் திங்கட்கிழமை (25ம் தேதி)  இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

அப்போது தமிழக அரசு வக்கீல், சூழலைப் பொறுத்து வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும் எனவும், அது குறித்து விரைவில் முன் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும்  தெரிவித்தார். அரசின் வாதத்தை தொடர்ந்து, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: