தமிழக மீனவர்கள் 4 பேர் பலி விவகாரம்: மத்திய அரசு விசாரணை நடத்த கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி மூழ்கடித்ததில் நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் தலா 10  லட்சம் வழங்குவதோடு பிரச்னை முடிந்துவிடப் போவதில்லை. இதற்கு பிறகு இத்தகைய உயிரிழப்புகள் ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த  வேண்டும். இதன் எதிர்வினையாகத்தான் அப்பாவி தமிழக மீனவர்கள் உயிரிழப்புக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு இலங்கை அரசு தான் பொறுப்பாகும். எனவே, மத்திய பாஜ அரசு, தமிழக மீனவர்களின் உயிரிழப்பு குறித்து தீவிரமான விசாரணையை  மேற்கொண்டு இந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 10 லட்சம் வழங்கியிருக்கிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை ₹1 கோடியாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: