மராத்தா இடஒதுக்கீடு சாத்தியமாகும்போது வன்னியர் இடஒதுக்கீடு சாத்தியமாகாதா? ராமதாஸ் கேள்வி

சென்னை: மராத்தா இடஒதுக்கீடு சாத்தியமாகும் போது வன்னியர் இட ஒதுக்கீடு சாத்தியமாகாதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: மண்டல் ஆணையத்தால் முற்பட்ட வகுப்பினர் என்று அறிவிக்கப்பட்ட மராத்தா சாதியினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் 21 இடங்களில் பேரணி நடத்தினார்கள். அதையேற்று அவர்களுக்கு 16% இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டுள்ளது. மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் ஒரே நாளில் (2018ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி) மராட்டிய சட்டப் பேரவையிலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றப்பட்டது. மராத்தா இடஒதுக்கீடு செல்லும் என  மும்பை உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. இடஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்ட சமூகத்திற்கே மராட்டியத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், மிக மிக பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு  வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதில் தமிழகம் சமூக நீதியின் தொட்டிலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: