மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டால் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது: முதல்வர் பாதுகாத்திட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: விளம்பர மோகத்தில் மயங்கி கிடக்கும் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசின்  புதிய நிலைப்பாட்டால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில்  வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும்  வந்திடாதவாறு  மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசு தெரிவித்திருக்கும் கருத்து அதிர்ச்சியளிக்கிறது.  மத்திய உள்துறை அமைச்சகம், குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் அனைத்தும் ஓரணியில் நின்று அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது, கல்வியின் தரத்தை பாதிக்கும் என தரத்தை பற்றி  நீண்ட காலமாக, பொதுவெளியில் வைக்கப்படும் சொத்தை வாதத்தைச் சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்வைத்திருப்பது, இளைஞர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

   அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்திட மத்திய அரசு, அம்மாநில துணைநிலை ஆளுநருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்கிறது.   தமிழகத்தில் திமுக  ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காமல் கவர்னர் கிடப்பில் போட்டிருந்தார். திமுகவின் போராட்டத்தாலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவாலும், இடஒதுக்கீடு மசோதாவிற்கு  ஒப்புதல் அளித்தார். அவ்வாறு ஒப்புதல் அளித்தபோது கவர்னரின் செய்தி குறிப்பில், “தமிழக அரசின் மசோதா மீது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் 26.9.20 அன்று கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 29.10.20 அன்று, அவர் தனது  கருத்தினை அளித்தார் என்று கூறியதோடு நில்லாமல், கவர்னர் செயலாளர், சொலிசிட்டர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தையும், அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் அளித்த கருத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு இணைத்தே வெளியிட்டிருந்தார்.

 கவர்னர் அந்த செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள கருத்துரையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மிக தெளிவாக மத்திய அரசின்  சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான் கவர்னர், தமிழக அரசின் மசோதாவிற்கு 30.10.20 அன்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசின் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர்  ஜெனரலே கூறியிருக்கும் போது, அவரின்கீழ் பணிபுரியும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் எப்படி புதுச்சேரி மாநில அரசு வழங்கும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபாடான  நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? குறிப்பாக, தமிழக மசோதா தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்ட நிலையில், புதுச்சேரி மாநில விவகாரத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை  உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்து - தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போராடி பெற்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டை சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அடிப்படையான சந்தேகம் எழுந்துள்ளது.

  மத்திய அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் அப்படியொரு விபரீத விளையாட்டை நடத்திட கனவிலும் நினைக்க கூடாது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மீது குறிப்பாக, மருத்துவ கல்வி கற்க  வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்தாண்டே மருத்துவக்  கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விளம்பர மோகத்தில் மயங்கி கிடக்கும் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில்  வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலே கூறியிருக்கும் போது, அவரின்கீழ் பணிபுரியும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் எப்படி புதுச்சேரி மாநில அரசு வழங்கும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபாடான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்?

Related Stories: