சென்னை: ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை வருகிற 28ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த நினைவு இல்லம் வருகிற 28ம் தேதி திறக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனாலும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீதுதான். அந்த வகையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வேதா இல்லம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வருகிற 28ம் தேதி (வியாழன்) திறக்கப்பட உள்ளது. இதுதவிர ஜெயலலிதாவின் நினைவு இல்லம் வருகிற 27ம் தேதி திறக்கப்படுகிறது. அந்த இடத்தில் ஜெயலலிதா அறிவு மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது’ என்றார்.