40 சவரன் கொள்ளை வழக்கில் திருப்பம்: நகைக்கு ஆசைப்பட்டு உரிமையாளர் பொய் புகார் கொடுத்தது அம்பலம்

பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம் திருவிக தெருவை சேர்ந்தகோபாலகிருஷ்ணன் (43), நேற்று பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.  அதில், நேற்று முன்தினம் இரவு எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகைகள், 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாக   கூறியிருந்தார். விசாரணையில், பல்லாவரம் குளத்து மேடு 5வது தெருவை சேர்ந்த கார்த்திக் (22), ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பிரதான சாலையை சேர்ந்த சஞ்ஜய் (19) மற்றும் பல்லாவரம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது  சிறுவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரித்தபோது, அந்த வீட்டில் 4 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி மற்றும் ₹9 ஆயிரம் மட்டுமே இருந்ததாக கூறினர். இதுபற்றி கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தீவிர  விசாரணையில், கொள்ளை போன நகை, பணத்தை உயர்த்தி கூறினால், தனக்கு அதிக நகை, பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பொய் புகார் அளித்ததாக கூறினார். அவரை  கடுமையாக எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து, கொள்ளையர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற  உத்தரவுப்படி, சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு மையத்திலும், மற்ற  இருவரையும் புழல் சிறையிலும் அடைத்தனர்.

Related Stories: