அரோகரா கோஷங்கள் முழங்க கொடியேற்றம் தைப்பூசத் திருவிழா பழநியில் துவங்கியது

பழநி:  திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முக்கிய விழாக்களில் தைப்பூசம் முக்கியமானது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தாண்டு  இவ்விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று காலை 7 மணிக்கு மகர லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்தியங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கோயிலின் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி வரப்பட்டது. பின்னர் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.

10 நாட்களும் வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 27ம்  தேதி இரவு 7.30 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் 28ம் தேதி மாலை ரதவீதியில் நடைபெறும். ஜன. 31ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும்

Related Stories: