கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர்: கொரோனா தொற்றில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் விடுபட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கொரோ னா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவியது. இதனால் மத்திய, மாநில அரசுகள்  ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த தொற்றுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 129 பேர் பலியாகியுள்ளனர். இந்த தொற்றில் இருந்து குணமடைந்து 7,392 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 250 முதல் 500 பேருக்கு நாளொன்றுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 10 பேருக்கு இந்த நோய் தொற்று பரவியது தெரிந்தது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: